வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

பிரிவாற்றாமை - காதல் பூக்கும் மாதம் - 70

7.பிரிவாற்றாமை

உன்னைவிட்டுப் பிரிந்தாலும்
உன் நினைவுகளை எடுத்துச் செல்கிறேன்’ என்கிறாய்.
இந்தா என் உயிரையும் எடுத்துசெல்.


செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

பிரிந்து செல்லாத நிலைமையாக இருந்தால் எனக்குச் சொல்; பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர் வாழ வல்லவர்க்குச் சொல்.


என்னை எப்பொழுது பார்ப்பாயென
காதலில் ஏங்கித் தவித்தக் கண்கொண்டு
உன்னை எப்படிப் பார்ப்பேன்?
பிரியப் போகிறாயெனத் தெரிந்தபின்…


இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்க ணுடைத்தாற் புணர்வு.

அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது. இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது.


பிரியமாய் இருப்பதால்தான்
பிரியாமல் இருப்பாயென
நம்பி ஏமாறுகிறதோ மனது?



அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ளபடியால், அவர் ‘பிரியேன்’ என்று சொல்லும் உறுதிமொழியை நம்பித் தெளிவது அரிது.


நீஅஞ்சாமல்,
உலகுக்கு அஞ்சிப் பிரிந்துவிட்டாய்.
நானோ துயருக்குத் தோழமையாகிறேன்.
காதலுக்கு துரோகியாகிறேன்.
பிரிவுக்கு

அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற்
றேறியார்க் குண்டோ தவறு.

அருள் மிகுந்தவராய் ‘அஞ்ச வேண்டா’ என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதி மொழியை நம்பித் தெளிந்தவர்க்குக் குற்றம் உண்டோ?


ரசித்து ரசித்து காதலிப்பது எப்படியென
தெரிந்த மனதுக்கு
பிரியாமல் உன்னைக் காப்பது எப்படியென
தெரியாமல் போனது!

ஓம்பி னமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கி னரிதாற் புணர்வு.

காத்துக் கொள்வதனால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும்; அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.


பிரிந்துவிடலாமா எனக்கேட்கத் துணிந்த
உன் கல் நெஞ்சில் மறுபடியும்
என்ன சுரக்குமெனக் காத்திருக்கிருக்கிறேன்?
காதல் நீரா? கானல் நீரா?


பிரிவுரைக்கும் வன்கண்ண ராயி னரிதவர்
நல்குவ ரென்னு நசை.

பிரிவைப் பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால், அத்தகையவர் திரும்பி வந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.


உடலில் குறையும் எடையைத்தான்
உள்ளத்தில் சுமையாகக் கூட்டுகிறதா
உன் பிரிவு?



துறைவன் றுறந்தமை தூற்றாகொல் முன்கை
இறையிறவா நின்ற வளை.

என் மெலிவால் முன்கையில் இறைகடந்து சுழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ?


என் உறவுகளைப் பிரிவது
உயிரேப் போவதுபோல..
உன்னைப் பிரிவதோ அதற்குமேலே…
அதை எப்படி சொல்ல?


இன்னாது இனனில்லூர் வாழ்த லதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு.

இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது; இனிய காதலரின் பிரிவு அதைவிடத் துன்பமானது.


தொட்டபோதெல்லாம் சில்லென இருந்துவிட்டு
விலகியபின்தான் எரிக்குதடி காதல் தீ!


தொடிற்சுடி னல்லது காமநோய் போல
விடிற்சுட லாற்றுமோ தீ.

நெருப்பு தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காம்நோய்போல் தன்னை விட்டு நீங்கியபொழுது சுடவல்லதாகுமோ?


உன்னைப் பிரிந்தபின்
நானும் கூட வாழ்ந்திருப்பேன்
உயிருள்ளப் பிணமாய்!


அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர்.

பிரியமுடியாத பிரிவிற்கு உடன்பட்டு ( பிரியும்போது ) துன்பத்தால் கலங்குவதையும் விட்டு, பிரிந்தபின் பொறுத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.

கருத்துகள் இல்லை: