புதன், 10 நவம்பர், 2010

அது ஒரு அழகிய

என் நெஞ்சில்
உன் முகம்
அழகிய சிற்பமாய்!

ஓ…!
எந்த உளி கொண்டு
இத்தனை அழகாய்
செதுக்கி விட்டு…

எனை நிர்க்கதியாய்
தவிக்கவிட்டுச் சென்றாய்…?

ம்…!
என் உணர்வுகளை
எங்கோ தொலைத்து விட்டு
உன் நினைவுகள் இன்றி
வாழவேண்டும் என்றுதான்
தினமும் முயற்சிக்கிறேன்.

ஆனாலும்
ஒவ்வொரு பொழுதும்
அது தோல்வியிலேயே
முடிந்து போகிறது!

நீ என்னை விட்டு
விலகியிருக்கும் துக்கம்
தினமும் எனை தூக்கிலிட…

எப்போதும்
என் யோசனைகள்
உன்னைச் சுற்றியே
வட்டமிட வட்டமிட…

துரத்தும் உன் நினைவுகள்
என் விழிகளின்
தூக்கத்தை தொலைத்து விட…

உருண்டு…
பிரண்டு…
உறக்கத்தை தேடுகின்றேன்!

அப்போது…
தொலைபேசியின் சிணுங்கல்!

“ஹலோ”… என்றேன்!

“அன்பே!… நலமா”… என்றாய்!

ஓ!… அது நீதான்!

“ம்ம்… நலம்”… என்றேன்!

உன் கனிவான பேச்சுக்கள்
என் காதுகளை நிறைக்கிறது!

இறுதியில்…
“என் உயிர் உன் வசம்”… என்றாய்!

உன் வார்த்தையின்
எதிர்பாராத திருப்பத்தை
என்னால்
நம்பவே முடியவில்லை!

இதை
நீயா சொன்னாய்…?

சொற்கள் தடக்கி விழ
தட்டுத் தடுமாறி…
விக்கித்து…

இடறி விழுந்து…
கண் விழித்து…
எழுந்து பார்க்கின்றேன்!

ஓ…!
அது ஒரு அழகிய
அதிகாலைக் கனவு!

பூவே! … பூவே!


தென்றலுக்குள்
நான் இருப்பேன்
அதனின்
இதமான குளிராக!


நிலவுக்குள்
நான் இருப்பேன்
அதனின்
மிதமான ஒளியாக!


பூவே! … பூவே!
உனக்குள் நான் இருப்பேன்
என்றும் வீசும் மணமாக!

அதிசயக் காதல்

அடிக்கடி
உன் முகத்தின் முகவரியை
அசைபோட்டுப் பார்க்கிறேன்!
பார்ப்போர்
எல்லோர் மீதும்
பாசம் வருவதில்லை!

கண்ணில்
காண்போர் எல்லோர் மீதும்
காதல் வருவதில்லை!

ஆனால் எப்படி
உன்மீது மட்டும்
இப்படி ஒரு காதல்!

என் இதயக் கோயிலில்
காதல் வேதங்கள் ஓதப்பட…

தென்றல் தெம்மாங்கு பாடி
ஊருக்கு அஞ்சல் செய்கிறது!

உன் வாசனைகள்
எனைக் கடந்து செல்கிறது!

ம்…!
இதயத்தின்
ஒவ்வொரு அறைகளிலும்
உன் முகம் பதிகிறது!

தாலாட்டும் பூங்காற்றாய்
தழுவிச் செல்லும்
உன் நினைவால்…

என் அனுமதிகள் எதுவுமின்றி
கற்பனை நான்கு திசைகளிலும்
எட்டிப் பார்க்க…

மௌனமாய் கருத்தரித்து
விரல் வழி பிறந்து
வழியும் கவிதைகளை
விடிய விடிய
எழுதி முடிக்கிறேன்!

நெஞ்சினில் அன்பையும்
கண்களில் காதலையும்
உள்ளே தேக்கி வைத்து
தளிர் விட்ட காதலை
உன்னிடம் சொல்லி விட…

கற்பனையாய்
ஆயிரம் கவிதைகள்!
கண்ணாடி முன்
ஆயிரம் ஒத்திகைகள்!

இருந்தும் என்ன பயன்…?

உன்னைக் கண்டவுடன்
உயிரெழுத்து எது
மெய்யெழுத்து எது
எதுவுமே தெரியவில்லை!

எத்தனை மொழிகள்
எனக்குத் தெரிந்திருந்தும்
அத்தனை மொழியையும்
மொத்தமாய் மறந்து
ஒரு மொழியும் தெரியாத
பிஞ்சுக் குழந்தையாய் என் காதல்!

ம்ம்…!
இது அதிசயக் காதல்தான்!