திங்கள், 15 நவம்பர், 2010

என் நாட்குறிப்பில





என்றோ நீ
என் கைக்கெட்டாத தூரத்தில்
கார்மேகத்துள் புதைந்து விட்டாய்!

கருகிய நெஞ்சத்தில்
விரக்தி மணம்
வீசும் போதெல்லாம்
உன் முகமே
என் மன வானில் மலர…

என் நெஞ்சமெங்கும்
உன் நினைவுகளின் விம்பங்கள்!

என் நாட் குறிப்பெங்கும்
உன் வார்த்தைப் புலம்பல்களே!

படகுகள்


வானமெங்கும் கானம் பாடி
என் வண்ணச் சிறகை விரித்து
வான் வெளியே வலம் வரும்
ஒரு வசந்த கால
பறவையல்ல நான்!

பிறக்கும் போதே
பாசம்…
நேசம்… என்னும்
வேர்களும் விழுதுகளும்
அறுக்கப்பட்டு…

பாவச் சிலுவைகளை
நெஞ்சில் சுமந்தபடி
பாரிலே பிறந்த பறவை நான்!

ஓ…!
இந்த வேசம்
நிறைந்த உலகிலே
பாசம் என்னும்
நேசம் தேடி…

இதயத்தில்
பாரம் சுமந்தபடி
பறக்கும்
பாலைவனப் பறவை நான்!

ம்…!
உன் வீட்டு
வாசலைக் கூட
நான் அடிக்கடி
கடந்து செல்கின்றேன்!

அங்கே…
கலைந்திருக்கும்
கோலங்கள் கண்டு
கண்ணீர் சிந்தியும்
சென்றிருக்கின்றேன்!
இழப்புகள் என்பது
உனக்கும் எனக்கும்
வெவ்வேறாக இருக்கலாம்!

ஆனால்
வேதனை சுமந்து
வெந்து துடித்து
ஏக்கத்தில் தவித்து…

இங்கே…
நாளும் ஒரே படகில்
பயணம் செய்பவரென்பது
முற்றிலும் உண்மைதான்!

ம்…!
இனி
இரு வேறாக
தனித்தனி படகில்தான்
போக வேண்டும் என்றாலும் போவோம்!

எப்படியோ …
எப்போதோ …
ஒரு நிமிடம் முடிந்தால்
எங்கேனும் ஒரு கரையில்

நினைப்போம்…!
நிற்போம்…!
நிதானிப்போம்…!