திங்கள், 30 ஆகஸ்ட், 2010

குறிப்பறிவுறுத்தல் - காதல் பூக்கும் மாதம் - 190

19. குறிப்பறிவுறுத்தல்

எல்லாவற்றையும் பங்கிடுவோம் என்றாய்.
நான் காதலைக் கொண்டு வந்தேன்.
நீ பிரிவைக் கொண்டு வந்தாய்.
கொண்டு வந்த பிரிவை என்னிடம் கொடுத்து விட்டு,
காதலை மட்டும் நீ வாங்கிக் கொள்ளவே வில்லை!


கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.

நீ பேரழகி என்று நான் பிதற்றுவதெல்லாம் பொய்தான்.
ஆனால் அதைக் கேட்டதும் வெட்கப்படுகிறாயே
அப்போதே அது உண்மையாகி விடுகிறது.


கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.

கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.

நீ கலந்து கொள்ளும் அழகிப் போட்டியில் மட்டும்
போட்டியின்றி ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்
உன்னை
!

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு.

மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.

நீ சிரிக்கும் போதெல்லாம்
வழுக்கி வழுக்கி விழுகிறேன்
உன் கன்னக் குழியில்.


முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.

என் ஆயுள் முழுவதுக்குமான
ஆனந்தம் முழுவதும் ஒளிந்திருக்கிறது
உன் அரை நொடிச் சிரிப்பில்!

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன் றுடைத்து.

வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.

“மீண்டும் சந்தித்தால்
கட்டிப் பிடிப்பாயா?” என்றால்,
“ம்ம்ம்… மீண்டும் பிரியாமலிருக்க
பிடித்துக் கட்டுவேன்” என்கிறாள்.
இவளைக் கட்டிப் பிடித்துக் கட்ட வேண்டும்
காதலால்!


பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.

ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே.

நீண்டப் பிரிவுக்குப் பிறகு என்னைக் கண்டதும்,
உன்னை விட்டுப் பிரியப் போகிற கவலை…
உன் ஆடைகளுக்கு!


தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.

குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!

“என்னைப் பிரிந்திருந்த போது எப்படி உணர்ந்தாய்?” என்றவளிடம்
“சொர்க்கத்தில் இருந்ததைப் போல” என்றதும் அழுகிறாள்.
உயிர் போனால்தான் சொர்க்கத்துக்குப் போக முடியும் என்பது
இவளுக்குத் தெரியாதோ?


நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.

நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே.

நீ சிகப்பாம்.
நான் கருப்பாம்.
கேலி பேசுகிறார்கள்.
உன்னையேத் தொடரும்
உன் நிழல் பின் எப்படியிருக்கும்?


தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.

பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.
“பிரிந்து விடு! பிரிந்து விடு!”
என்று ஆயிரம் வார்த்தைகளில் சொல்லிவிட்டு
ஒற்றைப் பார்வையில் உயிர் போகக் கெஞ்சுகிறாளே
இவளை விட்டு எப்படிப் பிரிய?


பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.

காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது.

கருத்துகள் இல்லை: